தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’

Thursday, January 05, 2012

தூக்கு
ஜார்ஜ் ஆர்வெல்

இது நடந்தது பர்மாவில், தொடர் மழையில் ஊறிய ஒரு காலை வேளை. சீக்குப்பிடித்த வெளிச்சம், மஞ்சள் நிறத் தகரக்காகிதம் போல, சிறையின் உயர்ந்த மதில்களின் மேல் சாய்ந்திருந்தது. நாங்கள் சிறைக்கூடங்களின் வெளியேக் காத்திருந்தோம், அவை ஒரு வரிசையில் இரட்டைக் கம்பிக்கதவுகள் போட்ட தடுப்புகளாய், சிறு மிருகங்கள் அடைக்கும் கூண்டுகளைப் போலிருந்தன. ஒவ்வொன்றும் சுமார் பத்தடிக்குப் பத்தடி அறை, ஒரு பலகைக் கட்டிலும் தண்ணீர்ப் பானையும் தவிர உள்ளே வெறிச்சோடிக் கிடந்தது. சிலவற்றில் பழுப்பு நிற மனிதர்கள் மௌனமாக கம்பிக்கதவுகளின் பின் போர்த்தியபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் யாவரும் தண்டனைப் பெற்றவர்கள், இன்னும் ஓரிரு வாரங்களில் தூக்கிலிடப்பட இருப்பவர்கள்.

ஒரு கைதியை அறையிலிருந்து வெளியேக் கொண்டுவந்திருந்தனர். அவன் ஒரு இந்து, ஒல்லி நோஞ்சான் உடம்பு, மொட்டைத் தலை, நீர்த்தக் கண்கள். தடித்த நீண்ட மீசை வைத்திருந்தான், ஆளுக்கு பொருத்தமில்லாத மிகப் பெரிய மீசை, சினிமாக் கோமாளி போல. உயரமான ஆறு சிறைக் காவலர்கள் அவனைக் கண்காணித்து தூக்குமேடைக்குத் தயார் செய்துகொண்டிருந்தார்கள். அதில் இருவர் கத்தி பொருத்திய துப்பாக்கிகளுடன் நின்றிருக்க, மற்றவர்கள் விலங்கை மாட்டி, அதில் சங்கிலியைக் கோர்த்துத் தங்கள் இடுப்புப் பட்டையில் இணைத்தார்கள், அவனுடையக் கைகளைப் பக்கவாட்டில் இருகக் கட்டினார்கள். அவனை மிகவும் நெறுங்கி இருந்து, எப்போதும் கை விலகாமல் கவனமாக, அணுக்கமான பிடியில், அவன் இருப்பதை உணர்ந்து உறுதிப்படுத்திக்கொள்வது போல சூழ்ந்திருந்தனர். அது உயிரோடு பிடித்த மீன் நழுவி தப்பித்துப் போய்விடாமல் பார்த்துக்கொள்வதைப் போல இருந்தது. ஆனால் அவன் துளி எதிர்ப்பும் காட்டது, தளர்வுடன் கைகளை பிணைக்கயிறு கட்டக் கொடுத்து, அங்கே நடப்பது எதுவும் பார்க்காதது போல இருந்தான்.

மணி எட்டு அடித்தது, அழைப்பு முழக்கம், அனாதரவாக சன்ன ஒலியாக ஈரக் காற்றில் தூரத்தில் இருந்த இராணுவ கூட்டத்திலிருந்து மிதந்து வந்தது. சிறைக் கண்காணிப்பாளர், எங்களைவிட்டுத் தள்ளி நின்றிருந்தவர், எண்ண ஓட்டத்தில் சரளைக் கற்களை தன் தடிக்குச்சியால் நிரடிக்கொண்டிருந்தவர், அந்த சத்தத்தைக் கேட்டுத் தலையை உயர்த்தினார். அவர் இராணுவ மருத்துவர், அவரின் பல்தூரி மீசை நரைத்து குரல் தடித்து இருந்தது. “கடவுளே சீக்கிரம் ஆகட்டும், ஃபிரான்சிஸ்“, என்றார் கடுகடுப்புடன். ”அவன் இந்நேரம் பிணமாகி இருக்க வேண்டும். நீ இன்னும் தயாராகவில்லையா?”.

ஃபிரான்சிஸ், தலைமை சிறை அலுவலர், குண்டு திராவிடன், வெள்ளைச் சீறுடையும் தங்கக் கண்ணாடியும் அணிந்தவன், தன் கருப்புக் கையை ஆட்டினான். “யெஸ் சார், யெஸ் சார்,” என்று பொங்கினான். “எல்லாம் நிறைவாக ஆயத்தமாயுள்ளன. தூக்கிலிடுபவன் காத்திருக்கிறான். நாம் ஆரம்பிக்கலாம்.”

“அப்படியானால், விரைந்து அணிவகுத்து நடவுங்கள். கைதிகளுக்கு இந்த வேலை முடியும் வரை காலை உணவு கிடைக்காது.” நாங்கள் எல்லோரும் தூக்குமேடைக்குக் கிளம்பினோம். இரண்டு சிறைக்காவலர்கள் கைதியின் இருபுறமும் அணிவகுத்து, துப்பாக்கிகளை சாய்த்து நடக்க; மற்ற இருவர் அவனுக்கு மிக அருகில் அணிவகுத்து, கையையும் தோளையும் பற்றிக்கொண்டு, ஒருசேரத் தள்ளவும் தூக்கவுமாக சென்றனர். ஏனைய நாங்கள், நீதிபதி மற்றும் சேர்ந்தாட்கள் பின் தொடர்ந்தோம். திடீரென, பத்து கஜம்தான் நடந்திருப்போம், அந்த பேரணி எந்தக் கட்டளையும், முன்னறிவிப்பும் இன்றி நின்று போனது. ஒரு மட்டமான செயல் நடந்தது - ஒரு நாய், எந்த சமயம் பார்த்து வந்ததோ, முற்றத்தில் முகம் காட்டியது. அது எங்களை நோக்கி துள்ளி வந்தது, சரமாரியாக உரக்க குரைத்துக்கொண்டு, எங்கள் மேல் தாவித் தன் உடல் முழுதும் நாட்டியமாட, பல மனிதர்களை ஒரு சேர பார்த்தக் கொள்ளை மகிழ்ச்சியில் சுற்றிச்சுற்றி வந்தது. அதன் உடம்பெல்லாம் முடி, பாதி ஏர்டேல் வகை கலப்பின நாய். எங்களை சுற்றி சற்று நேரம் தாவி குதித்துவிட்டு, யாரும் தடுப்பதற்கு முன், அந்த கைதியின் மேல் பாய்ந்தது, மேலே ஏறி அவன் முகத்தை நக்கிக்கொடுக்க முயன்றது. எல்லோரும் பயத்தில் உறைந்திருந்தனர், அதைப் பிடிக்க எத்தனிக்கக்கூட இயலாமல் பின்வாங்கி இருந்தனர்.

“யார் அந்த வெறிபிடித்த மிருகத்தை உள்ளே விட்டது?” கண்காணிப்பாளர் கோபமாகக் கத்தினார். “அதை யாராவது பிடியுங்கள்!”

ஒரு சிறைக் காவலர், அணிவகுப்பிலிருந்து பிரிந்து, அந்த நாயைத் தட்டுத்தடுமாறி பிடிக்கப்போனார், ஆனால் அது போக்குக் காட்டி பிடிகொடுக்காமல் கூத்தாடியது, எல்லோரும் தன்னோடு விளையாடுகிறார்கள் என்று நினைத்தது. ஒரு ஐரோப்பா-ஆசியக் கலப்பினக் காவலன், கைநிறையக் கற்களை எடுத்து வீசி நாயை அடித்து விரட்ட முயன்றான், ஆனால் அது கற்கள் மேலே படாமல் விலகி எங்களை நோக்கி வந்தது. அது குரைக்கும் சத்தம் சிறை மதில்களில் எதிரொலித்தது. அந்தக் கைதி, இன்னும் இரண்டு காவலர்களின் பிடியில் இருந்தவன், ஆர்வமில்லாது இதுவும் தூக்கிடுவதில் மற்றொரு சடங்கு என்பதுபோலப் பார்த்தான். யாரோ ஒருவர் அந்த நாயைக் கட்டுப்படுத்துவதற்குள் சில நிமிடங்கள் ஆயிற்று. என் கைக்குட்டையை அதன் கழுத்து பட்டியில் சுற்றி பிடித்துக்கொள்ள எங்கள் பேரணி மீண்டும் தொடங்கியது, நாய் முனகலுடன் திமிறியபடி வந்தது.

தூக்கு மேடைக்கு இன்னும் நாற்பது கஜம் இருந்தது. நான் எனக்கு முன்னே சென்ற கைதியின் வெற்று முதுகை பார்வையிட்டேன். அவன் கட்டப்பட்ட கைகளுடன் தள்ளாடி நடந்தான் ஆனால் மிக நிதானமான, ஒருபோதும் முழங்கால்களை விரைப்பாக்காத இந்தியர்களின் நடை பாணியில். ஒவ்வொரு அடியிலும் இறுகிய சதைகள் சரிந்து மீண்டும் அதன் இயல்பிற்கு வந்தன, பின்னந்தலைக் குடுமி மேலும் கீழும் நர்த்தனமாடியது, அவன் கால்த்தடங்கள் ஈரத்தரையில் அச்சு பதித்தன. ஒரு சந்தர்ப்பத்தில், இரண்டுபேர் அவனுடைய தோள்களை இருக்கிப் பிடித்திருந்ததையும் மீறி, தேங்கியிருந்த நீர்க்குட்டையில் கால் வைக்காமல் சற்றே விலகி நடந்தான்.

ஆச்சரியம் என்னவென்றால், அந்தக்கணம் வரையிலும் நான் ஒரு ஆரோக்கியமான, சிந்தையுள்ள மனிதனை தகர்க்கப்போகிறோம் என்பதை உணரவில்லை. அவன் நீர்க்குட்டையிலிருந்து விலகி நடப்பதை பார்த்தபோதுதான், அந்த மர்மம் புலப்பட்டது, அந்த சொல்லவியலாதத் தப்பிதமான, வாழ்க்கை அதன் முழு வீச்சில் இருக்கையில் வெட்டி வீழ்த்தும் செயல். அந்த மனிதன் சாகக்கிடக்கவில்லை, உயிரோட்டத்தோடுதான் இருக்கிறான் நாங்கள் இருப்பதற்குச் சமமாக. எல்லா உறுப்புகளும் வேலை செய்கின்றன - வயிறு செரிக்கிறது, தோல் புதுப்பித்துக் கொள்கிறது, நகம் வளர்கிறது, திசு உருவாகிறது - உறுப்புகள் எல்லாம் வேறு சிந்தனை இல்லாமல் தன் போக்கில் உழல்கின்றன. அவனுடைய நகங்கள் வளர்ந்துகொண்டுதான் இருக்கும், தூக்குமேடையில் நிற்கும்போதும் சரி, அந்தரத்தில் விழும் கடைசி நொடிகளின் போதும் சரி. அவன் கண்கள் மஞ்சள் நிறத் தரையைப் பார்க்கின்றன, சாம்பல் நிறச் சுவற்றையும் காண்கின்றன, மூளை இன்னமும் நினைவு கூர்கிறது, முன்னுணர்வு கொள்கிறது, சீர்தூக்கச் செய்கிறது - நீர்க்குட்டையைப் பற்றிக்கூட. அவனும் நாங்களும் கூட்டாகத்தான் நடக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம், அதே உலகத்தை புரிந்துகொள்கிறோம்; ஆனால் இன்னும் இரண்டு நிமிடங்களில், ஒரு சொடுக்கில், எங்களில் ஒருவர் இருக்கப்போவதில்லை - ஒரு மனது குறையும், ஒரு உலகம் மறையும்.

தூக்குமேடை சிறிய முற்றத்தில், சிறையின் இதர முக்கியப் பகுதிகளிலிருந்து தனித்து இருந்தது, சுற்றிலும் முள்ச்செடிகள் மண்டிக்கிடந்தன. மூன்று பக்கமும் கற்களால் எழுப்பிய மேடை, அதன் மேல் பலகைகள், அவற்றுக்கும் மேல் இரண்டு தூண்கள், குறுக்குச்சட்டம், அதில் ஊசலாடிய கயிறு. தூக்கிலிடுபவன், ஒரு முடி நரைத்த குற்றவாளி, சிறைக்கூட வெள்ளைச் சீறுடையில், எந்திரத்திற்கு அருகில் காத்துக்கொண்டிருந்தான். எங்களைப் பார்த்துக் கூழைக்கும்பிடு போட்டான். ஃப்ரான்சிஸ் சொல்ல இரு காவலர்கள் கைதியை இன்னும் இருக்கமாகப்பிடித்து, பாதி நடையும், பாதி தள்ளுமாக தூக்குமேடைக்குச் செலுத்தி தட்டுத்தடுமாறி ஏணிப்படியில் ஏற உதவினர். அதன் பின் தூக்கிலிடுபவன் மேலே போய், சுறுக்குக்கயிற்றைக் கைதியின் கழுத்தில் மாட்டினான்.

நாங்கள் ஐந்து கஜம் தள்ளி காத்து நின்றோம். காவலாளிகள் உத்தேசமான வட்டவடிவில் தூக்குமேடையைச் சுற்றி நின்றுகொண்டார்கள். சுறுக்கு கழுத்தில் இறுகியதும், அந்த கைதி தன் கடவுளை வேண்ட ஆரம்பித்தான். உச்சத்தொனியில், திரும்பத் திரும்பச் சொன்னான், “ராம்! ராம்! ராம்! ராம்!”, அவசரகதியில் பய நடுக்கத்தில் ஜபிப்பது போலோ உதவிக்கு கூப்பாடு போடுவது போலில்லாமல், நிதானமாக, தாளரீதியில், கோவில் மணி அடிப்பதற்கு ஒப்பாக இருந்தது. நாய் பதிலுக்கு ஈனமாக அழுகை ஒலி எழுப்பியது. தூக்கிலிடுபவன் இன்னும் மேடைமேல் இருந்தான், சின்ன பருத்தித் துணிப்பையை எடுத்து, மாவு சாக்கு போலிருந்த அந்தப் பையைக் கைதியின் தலை மேல் கவிழ்த்து முகத்தை மூடினான். ஆனால் அந்த சத்தம், துணியால் மட்டுப்பட்டாலும், இன்னும் தொடர்ந்தது, மீண்டும் மீண்டும்:“ராம்! ராம்! ராம்! ராம்!”

அந்தத் தூக்கிலிடுபவன் கீழே இறங்கி இயந்திரத்தின் நெம்புகோலை பிடித்து தயாராக நின்றான். கைதியிடமிருந்து நிலையாக, மட்டுப்பட்ட வேண்டுதல் கேட்டுக்கொண்டே இருந்தது, “ராம்! ராம்! ராம்! ராம்!” ஒரு கணமேனும் பிசிறில்லை. கண்காணிப்பாளர், தலைக் குனிந்து தன் தடிக்குச்சியால் தரையை நோண்டிக்கொண்டிருந்தார்; எத்தனை முறை கூப்பிடுகிறான் என்று எண்ணிக்கை எடுத்தாரோ ஏதோ, கைதிக்கு குறிப்பாக இத்தனை தடவையென்று அனுமதி தரும் நோக்கில் - ஒரு ஐம்பது அல்லது ஒரு நூறு. எல்லோரும் நிறம் மாறிப்போயிருந்தனர். இந்தியர்கள் திரிந்த காப்பி போல வெளிறிப்போனார்கள் - ஒன்றிரண்டு துப்பாக்கிகள் அல்லாடின. நாங்கள் கட்டப்பட்டு முகத்திரை இட்டு தூக்குமேடையில் இருந்த மனிதனைப் பார்த்தவண்ணம், அவனுடைய வேண்டுதலைக் கேட்டோம் - ஒவ்வொரு அழைப்பும் மற்றொரு விநாடிநேர வாழ்க்கை; எல்லோர் மனதிலும் அதே எண்ணம்: ஓ, அவனை சடுதியில் கொல்லுங்கள், கதை முடுயட்டும், அந்த வெறுப்பான இரைச்சலை நிறுத்துங்கள்.

சட்டென்று கண்காணிப்பாளர் முடிவுக்கு வந்தார். தலையை நிமிர்த்திக்கொண்டு தடிக்குச்சியை விசிறினார். “சலோ!” என்று கொஞ்சம் ஆங்காரமாக கத்தினார்.

இயந்திரம் உராயும் சத்தம் கேட்டது, அதன் பின் மயான அமைதி. அந்த கைதி போய்விட்டான், கயிறு தன்னைத்தானே முறுக்கிக்கொண்டது. நான் பிடியைத்தளர்த்தி நாயை விடுவித்தேன், அது உடனே தூக்குமேடையை நோக்கிப் பாய்ந்து ஓடியது; ஆனால் சற்று அருகே சென்றதும், குரைத்து விட்டு, பின்வாங்கி முற்றத்தின் மூலைக்கு ஒடுங்கி, அங்கே முட்புதர்களுக்கு இடையே நின்று, எங்களை நடுக்கத்துடன் பார்த்தது. நாங்கள் தூக்குமேடையைச் சுற்றிச்சென்று கைதியின் உடலைப் பரிசோதிக்கப் போனோம். ஊசலாடியபடி, அவன் கால்விரல்கள் செங்குத்தாக தரையை நோக்கி இருக்க, மிக மெதுவாக சுழன்றுகொண்டிருந்தான், கல் போல செத்திருந்தான்.

கண்காணிப்பாளர் தன் தடிக்குச்சியை வைத்து அந்த வெற்றுடம்பை குத்திப் பார்த்தார்; அது சற்றே அல்லாடியது. “அவன் சரியாகத்தான் இருக்கிறான்,” என்றார். அவர் தூக்குமேடைக்கடியிலிருந்து வெளிப்பட்டு, பெருமூச்செறிந்தார். சிந்தனை வயப்பட்டமுகம் இப்போது காணாமல் போயிருந்தது. கைக்கடிகாரத்தை பார்வையிட்டார். “எட்டு மணி எட்டு நிமிடம்”, நல்லது, இன்றைய காலை வேலைகள் முடிந்தன. நன்றி கடவுளே.” என்றார்.

காவலர்கள் துப்பாக்கிகளிலிருந்து கத்திகளை பிரித்து எடுத்து அணிவகுத்துப் போய்விட்டனர். அந்த நாய், தெளிந்து தான் செய்த சேட்டையை உணர்ந்து, அவர்களுக்குப் பின் ஓடிப்போய்விட்டது. நாங்கள் தூக்குமேடை முற்றத்தை விட்டு வெளியேறி, கைதிகள் காத்திருந்த குற்றவாளிகள் சிறைக்கூடத்தைத் தாண்டி, சிறையின் பெரிய நடு முத்தைவெளிக்கு வந்தோம். குற்றவாளிகள், லத்தி சகிதம் இருந்த காவலர்களின் ஆணைப்படி காலை உணவு பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நீள்வரிசையில் உட்கார்ந்து, ஒவ்வொருவரும் தகரத்தட்டு ஏந்தியிருக்க, இரண்டு காவலர்கள் அவர்களுக்கு அரிசி சோறு பரிமாரினார்கள்; அது வீட்டு நிகழ்ச்சி மாதிரி இருந்தது, தூக்கு நிரைவேறியபின் மகிழ்ச்சியான தருணம். எங்களுக்கு ஒரு பெரிய பாரம் குறைந்தது போல இருந்தது, வேலை முடிந்தது அல்லவா. உணர்ச்சி பொங்கியது, பாடவும், விட்டு ஓடவும், எக்காளமாய் சிரிக்கவும் என்று. ஒரே நேரத்தில் எல்லோரும் அளவளாவத் துவங்கினார்கள்.

ஐரோப்பிய-ஆசிய கலப்பினப் பையன் என்னோடு நடந்து வந்து நாங்கள் வந்த பாதையை நோக்கி தலையாட்டி, அறிந்துகொள்ளக்கூடிய புன்னகையுடன்: “உங்களுக்குத் தெரியுமா, சார், நம் நண்பன் (இறந்த மனிதனைச் சொல்கிறான்), அவனுடைய மறுபரிசீலனை மனு நிராகரிக்கப்பட்டதைக் கேட்டதும், அவன் கூண்டில் தரையிலேயே பயத்தில் மூத்திரம் போய்விட்டான். அருள்கூர்ந்து என்னுடை ஒரு சிகரெட் எடுத்துக்கொள்ளுங்கள், சார். என்னுடைய புதிய வெள்ளி பெட்டி பிரமாதம் இல்லையா? தச்சர்கள் செய்தது, இரண்டு ரூபாய் - எட்டு அணா. மேன்மையான ஐரோப்பிய பாணி.”

பலர் சிரித்தார்கள் - எதைப் பார்த்து, ஒருவருக்கும் உறுதியாகத் தெரியாது.
ஃபிரான்சிஸ் கண்காணிப்பாளருடன் வளவளவென்று பேசிக்கொண்டு வந்தான். “நல்லது, சார், எல்லாம் மிக நிறைவாக நடந்தேறியுள்ளன. எல்லாம் முடிந்தது - இப்படி - ஒரு சொடக்கில்! எப்போதுமே இப்படியா என்றால் இல்லை - ஓ, நோ! நான் கேள்விப்பட்ட சில சம்பவங்களில், மருத்துவர்கள் தூக்கு மேடைக்குக் கீழேப் போய் கைதியின் கால்களைப் பிடித்திழுத்து சாகடிக்கவேண்டி இருந்தது. கொடுமை!”

“உடம்பு இன்னும் நெழிந்து கொண்டிருக்கும்போதா? அது மோசம்.”, என்றார் கண்காணிப்பாளர்.
”ஆமா சார், இதைவிட மோசம் என்னவென்றால், கைதிகள் ஒத்துழைக்காததுதான்! ஒரு ஆள், எனக்குத் தெரிந்து, அவனை அறையிலிருந்து கூட்டிவரப்போனபோது, கம்பிக்கதவை தொற்றிக்கொண்டான். சொன்னால் நம்பமாட்டீர்கள், சார், ஆறு காவலர்கள் தேவைப்பட்டனர் அவனைத் தூக்கிவர. இரண்டு பக்கமும் மூன்று பேர் சேர்ந்து காலை இழுத்து எடுக்கவேண்டி இருந்தது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். “இப்படி எங்களை தொந்தரவு செய்கிறாயே, எங்களுக்கு எத்தனை சிரமங்கள் என்று கொஞ்சம் நினைத்துப்பார்” என்று. அவன் கேட்பதாயில்லை. அவனால் ரொம்பவே கஷ்ட்டப்பட்டோம்.!”

என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. எல்லோரும் சிரித்தார்கள். கண்காணிப்பாளர் கூட சகிக்ககூடிய வகையில் புன்முறுவல் செய்தார். “நீங்கள் எல்லோரும் வந்து கொஞ்சம் மது அருந்தினால் நன்றாயிருக்கும்,” என்று மிகப் பெருந்தன்மையுடன் அழைத்தார். ”என் காரில் ஒரு பாட்டில் விஸ்கி இருக்கிறது. நமக்கு உபயோகப்படும்.”

நாங்கள் சிறையின் இரட்டைக் கதவுகளைத் திறந்து சென்று சாலைக்கு வந்தோம். “காலை இழுக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு பர்மிய நீதிபதி திடீரென்று சத்தமாக எக்களித்தார். நாங்கள் எல்லோரும் சிரித்தோம். அந்த நேரத்தில் ஃபிரான்சிஸ் சொன்ன சம்பவம் மிகவும் கேலிக்கூத்தாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து மது அருந்தினோம், பர்மியர்கள், ஐரோப்பியர்கள் உட்பட மிகுந்த நட்புரிமையோடு. செத்தவன் ஒரு நூறு கஜ தொலைவில் கிடந்தான்.


மேல் விவரங்களுக்கு: விமலாதித்த மாமல்லனின் சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ - இடுகை.

என்னால் ஆன முயற்சி செய்து தமிழில் தந்துள்ளேன். தவறு பிழைகள் இருந்தால் தெரிவிக்கவும்.

1 மறுமொழிகள்:

குலவுசனப்பிரியன் said...

தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல் தமிழில் - பு பித்தன் முதலிலேயே படித்திருந்தால் - என் நேரம் வீணாகியிருக்காது.

Post a Comment