பொட்டி மன்றம்

Thursday, December 27, 2007

எங்கள் ஊரில் நடக்க இருக்கும் பொங்கல் விழாவில் நடிக்க என்று நான் எழுதிக் கொடுத்த முதல் படிவம். நாடகமாக எப்படி வடிவம் பெறும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.


தலைப்பு: வடையில் சிறந்தது எது?
நடுவர்: பாப்பு

வழக்காடுவோர்:
பருப்புவடை கட்சி
மணி
வேலு
விக்கி

மெதுவடை கட்சி:
ராசு
பார்த்தி
செந்தில்


அரங்கு:
பாப்பு பொட்டிக் கடை வைத்திருக்கிறார்
வழக்காடுவோர் இருபுறமும் அமர்ந்திருக்கிறார்கள்.

ராசு: பாப்பு, என்ன கடை பக்கம் ஒருத்தரையும் காணோம்.

விக்கி: அதான் நீங்க இருக்கிறீங்களே. எப்பிடி வருவாங்க. உங்க குசும்புக்கு பயந்துதான் பாப்புக் கடையில அல்வாவே விக்கிறது இல்ல.

ராசு: என்ன பாப்பு இது. கடையில வியாபாரம் நடந்தாத் தானே உனக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.

வேலு: ஏதாவது போட்டி ஈட்டின்னு வைப்பூ. கூட்டம் கூடும். நாங்க களம் இறங்க தயாரா இருக்கோம். (வேட்டியை வரிந்து கட்டுகிறார்).

பாப்பு: போட்டி தான. வச்சிட்டா போவுது. ஏங்கிட்ட ரெண்டு வடை இருக்கு. ஒண்ணு மெது வடை. ஒண்ணு பருப்பு வடை. வாங்க பேசுங்க.

செந்தில் (குதிக்கிறார்): நான் மெதுவடை கட்சி, மெதுவடை கட்சி.
மணி: ஹி...ஹி...ஹி...ஹி...ஹி (மலர்ச்சி காட்டுகிறார்)

வேலு: அப்ப சரி, நான் மசால்வடை கட்சி.

பார்த்தா: வேலு, போட்டி சரி அது என்னய்யா ஈட்டி. பருப்புவடை சரி. அது என்ன மசால்வடை. மசால்னா கறி மசாலா? அப்ப ஈட்டி வேட்டை ஆடுறதுக்கா?

வேலு: ஆரம்பிச்சிட்டான்யா. ஆரம்பிச்சிட்டான்யா? இனி நம்ம கதை கந்தல்தான்.

மணி: ஹி...ஹி...ஹி...ஹி...ஹி

செந்தில்: ஏண்ணே, இவ்வளவு சந்தோசமா இருக்கீங்க?

மணி: உனக்கு என்ன வடை பிடிக்கும்னு சொன்ன?

செந்தில்: மெது வடை தான்ணே.. நல்லா மெத்து மெத்துன்னு இருக்கும்ணே.

மணி (அடிக்கப் போகிறார்): உன்னை மொத்து மொத்துன்னு மொத்துறதுக்கு எனக்கு அதுதான சரி.

ராசு (அவர்களை பிரித்து): புலவர்களே, சற்று சாந்தமாக உரையாடுங்கள்.

மணி (புலவர் தோரணையில் தாடியை நீவியவாறு): ராசு, இது மரியாதை இது மரியாதை.

(வேலுவை எதிர்த்து பார்த்தி, மணியை எதிர்த்து செந்தில். செந்திலோடு சேர்ந்து ராசு என்று தானாகவே இரண்டு அணிகள் உருவாகின்றன.)

(செந்தில் கையில் வடையை எடுத்து ஆராய்ச்சியில் மூழ்கி விடுகிறார்).

விக்கி: ஆளாளுக்குப் பேசாதீங்கய்யா. அமெரிக்கால பாம்பை அடிக்கணும்னா கூட ஒவ்வொருத்தரா தான் போரான்.

பாப்பு: சரிய்யா. ஆரம்பிச்சுறலாமாய்யா? ஏங்கிட்ட ரெண்டு வடை இருக்கு. ஒண்ணு பருப்பு வடை, ஒண்ணு மெதுவடை. வாங்க பேசுங்க.
இந்தப் பக்கம் ...

மணி: ஏய் பெருசு. நிறுத்து. இனிமே நாங்க பாத்துக்கறோம். ஏம்பா ராசு. நீ கொடுக்கறது மெதுவடைனாலும், சாப்புடறது பருப்பு வடைதானப்பா. உன்னையும் என்னையும் பாரு. பருப்போட பலம்தானப்பா இதெல்லாம். கொண்ட கொள்கையில உறுதி வேணுமப்பா.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல் சந்தடி சாக்குல கட்சி மாறிட்டியே. உன் லொள்ளுக்கு அளவே இல்லையா? பாப்பு, நமக்கு பலம் தரும் பருப்பே காப்பு. (அபய முத்திரை காண்பித்து அமர்கிறார்)

ராசு (எழுந்து): நம்ம மணி கொள்கை, துரோகம்ன்னு பெரிய பேச்செல்லாம் பேசறாரு. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க.

பாப்பு: உங்களுக்கு கொள்கையே இல்லைன்னு சொல்றீயளா?

ராசு (நம்பியார் பாணியில்): நம்ம பண்பையே (character) புரிஞ்சிக்க மாட்டேங் கறாங்களே? (மித மிஞ்சிய அடக்கத்துடன்) ஏனுங்கண்ணா மணியண்ணாங்? உங்க பையன என்னங் படிக்க வைக்கிறீங்?

மணி (பெருமையுடன்): ஹ.. பொறியியல்.
ராசு: அவருக்கு புடிச்ச படிப்பு என்னதுங் அண்ணா?
மணி: ஹ.. ஹ.. புவியியல்.

ராசு: (நிமிர்ந்து சத்தமாக) அதைப் படிச்சா பைசா தேறாதுன்னுதான அப்படி செய்தீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? நம்ம வேலைக்கு ஆவறது அல்வாவுக்கு அடுத்து மெது வடை தானுங்க அண்ணோவ். குடுத்தமா, சாப்பிட்டாங்களா, கை கழுவுனாங்களான்னு இருக்கும். வீட்டுல நின்னு நிதானமா சாப்பிடத்தானுங் பருப்புங். ஏனுங் புரிஞ்சுதாங்கங்.

பாப்பு: ராசுன்னுன்னா ராசுதான்யா? அசுர புடி புடிச்சாருய்யா?
வேலைக்கு உகந்த வடை மெது வடை.
வீட்டுக்கு தகுந்த வடை பருப்பு வடை.
அடுத்து வாங்க வேலு, உங்க வாதத்தை எடுத்து வையுங்க.

வேலு: வாதமா ஏங்க, நல்லாத் தானங்க நடந்து வற்றேன். அமெரிக்கா ஏங்க இப்பிடி கெடக்கு. பொரியலுக்கும், புதயலுக்கும் கூடவாய்ங்க படிப்பாய்ங்க. அதான் நம்மூருகாரய்ங்களுக்கு இங்க இம்புட்டு மவுசா? எல்லாரும் எங்க ஊரு பய புள்ளக மாறி மசால் வடை ...

பார்த்தி (மிரட்டல் தொனியில்): ஏய்... ஈட்டி.

வேலு: படுத்தரான்யா. பேச உடுய்யா, சரி பருப்பு வடை சாப்புடுங்கைய்யா. மண்டையில மசால் ...

பார்த்தி: ஏய். ஈட்டி

வேலு: அவ்வ்வ்வ்... இது வேற மசாலுய்யா. மசாலு. நல்லா மண்டையில ஏறும். நான் வர்றேன்.

பாப்பு: தமிழுக்கு வந்த கதிய பாத்தீயளா. பொறிகளின் இயல்பைப் பற்றி படிப்பது பொறியியல். எலிப்பொறி தெரியும் இல்லையா? அந்தப் பொறி ஒரு engine தானங்க, பார்த்தி வாங்க, கொஞ்சம் புத்தி சொல்லுங்க.


பார்த்தி:
உங்க ஆச்சி தண்ணி ஊத்தி கடலப்பருப்பு ஊறவச்சு, வத்தல வதக்கிப் போட்டு, சீரகம் தூவிவிட்டு, மாவா அரைச் செடுத்து, கருவேப்பிலை கிள்ளிப் போட்டு, வெங்காயம் நறுக்கிப் போட்டு,, அடுப்பு மூட்டி, எண்ணெய் காய வைச்சு, வட்ட வட்டமா தட்டிப் போட்டு, திருப்பி போட்டு சுட்டெடுத்தா நல்லாத்தான் இருக்கும்.

மணி: ஏய்.. உப்பு போட மறந்துட்டப்பா.

பார்த்தி: ஓ. மன்னிச்சுக்கப்பா. சுட்ட வடயில உப்பு போட முடியாதே. நான் முதல்ல இருந்து வற்றேன். உங்க ஆச்சி தண்ணி ஊத்தி, கடலப்பருப்பு ஊரவச்சு ...

எல்லோரும்: அப்பா வேண்டாம்பா. நாங்க உப்பு இல்லாமலேயே சாப்பிடுக்கறோம். நீ அடுத்து சொல்ல வந்தத சொல்லுப்பா?

பாத்தி: பருப்பு வடை நீ சாப்பிடுவ. சிரமப் பட்டு சுட்ட பாட்டி சாப்பிட முடியுமாய்யா? சுடச் சுலபமான மெது வடைதான் சிறந்தது.

பாப்பு: சுலபமாச் சுட மெது வட. அருமை அருமை.

விக்கி: ஏன் பாட்டிக்கு கோல் ஊணித்தான் நடக்க முடியும். அதுக்காக, எல்லோரும் கோல் ஊணித்தான் நடக்கணுமா? ஏன் இளைஞர்கள் நெஞ்செல்லாம் கல்லா போச்சு. அந்தப் பாட்டிக்கு அதாவது உங்கப் பாட்டிக்கு செயற்கைப் பல் கட்டி விட்டா, பருப்புவடை சாப்பிட மாட்டாங்களா? பல் இல்லையின்னா தான்டா பாட்டி. பல் இருந்தா ஆண்ட்டிடா. இளமையின் அடையாளம் பருப்பு வடை தான்டா.

பாப்பு: மெது வட மொது மொதுன்னு இருக்கும்யா. கிழடு தட்டுனாப்புல. பருப்பு வடைதான் சாப்பிடரவங்களுக்கு கம்பீரம்யா. வாங்க செந்தில் ரொம்ப நேரமா ஏதோ ஆராய்ச்சிப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. உங்க பங்க சொல்லுங்க.

செந்தில்: நடுவரே, பாட்டி கதையில காக்கா தூக்கிட்டு போனது எந்த வடையின்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்.

மணி: டேய் நாதாரி. இந்த வடைய வச்சு சங்க காலத்து வடை எதுன்னு எப்படிடா சொல்லுவ?
ராசு: அவசரப் படாதீங்க மணி. சேது சமுத்திர பிரச்சனை மாரி ஆயிடப் போவுது.
விக்கி: உன் லொள்ள கொஞ்சம் அடக்குப்பா. நீயே ஊதி விடுவ போல இருக்கே.

செந்தில்: அண்ணே, காக்கா வடைய திருடிச்சி. ஆனா சாப்பிட்டுச்சா?
எல்லோரும்: இல்ல.

செந்தில்: சாப்பிடாமயே ஏன் அதுக்கு தண்ணி தவிச்சிச்சி.

பாப்பு (குழப்பத்துடன்): அது வேற கதையில்ல.

செந்தில்: ஆனா காக்கா அதேதான அண்ணே.

மணி (வெறியுடன்): ஆ.ஆ.ஆ (ராசு பிடித்து கொள்கிறார்)

செந்தில்: ஏன்னா, மெது வடையிலதான் பச்சை மிளகாய் இருக்கு. காரம் அதிகம். அதான் சும்மா கவ்வுனதுக்கே தண்ணி தவிச்சிருச்சி.

பார்த்தி: ஆ என் கண்ணக் கட்டுதே. (மயங்கி சாய்கிறார்).

மணி: ஆ.ஆ.ஆ. என்னை யாரும் தடுக்காதீங்க.

செந்தில்: அண்ணே, சும்மா இருங்க. இது உங்க வீடு இல்ல. பொது இடம். சங்க காலப் பாட்டி சுட்டது மெது வடை தான். அதுதான் சிறந்த தமிழர் உணவு.

வேலு: பாப்பு சீக்கிரம் தீர்ப்பு சொல்லுங்க பாப்பு, எல்லாரும் முட்டிக்கிட்டு நிக்கிறாங்க. ஏதாவது ஏடா கூடமா ஆகிடப் போவுது.

பார்த்தி (முழித்துக் கொண்டு): அது என்னது ஏடா கூடம்.

வேலு: இதுக்கு மட்டும் மயக்கம் தெளிஞ்சிருமாய்யா? ஏன்யா என் உயிர எடுக்கற.

பாப்பு: ரொம்ப சிக்கலான வழக்காயிருக்கே. நான் தீர்ப்ப மின்-அஞ்சல் செய்யட்டுமா?

எல்லோரும்: அந்த வேலையே வேணாம். தீர்ப்ப சொல்லுங்க.

பாப்பு: நம்ம ராசு சொன்னாருல்ல. மெதுவடை பஞ்சு மாதிரி அதான் நாளான வடைய பிச்சா நூல் விடும். ஆனா விக்கி சொன்னாப்புல பருப்பு வடைக்கின்னு ஒரு மிடுக்கு இருக்குல்ல. ஒண்ணு சதையாட்டம். ஒண்ணு எலும்பாட்டம். உடம்புக்கு தேவை சதையா எலும்பா? வடையில் சிறந்தது மெது வடையா? பருப்பு வடையா? ரெண்டும் தான். அதான் நம்ம தீர்ப்பு. வாங்க எல்லாரும் சாப்பிடுங்க.

கட்டிலிலே ஆறு பேர் படுத்திருந்தாங்க

Saturday, December 08, 2007

கட்டிலிலே ஆறு பேர் படுத்திருந்தார்கள்
குட்டி பெண் சொன்னாள்,
"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".
எல்லோரும் தள்ளிப் படுக்க
ஒருத்தர் உருண்டு விழுக.

இப்போ கட்டிலிலே ஐந்து பேர் படுத்திருந்தார்கள்
குட்டி பெண் சொன்னாள்,
"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".
எல்லோரும் தள்ளிப் படுக்க
ஒருத்தர் உருண்டு விழுக.

இப்போ கட்டிலிலே நான்கு பேர் படுத்திருந்தார்கள்
குட்டி பெண் சொன்னாள்,
"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".
எல்லோரும் தள்ளிப் படுக்க
ஒருத்தர் உருண்டு விழுக.

இப்போ கட்டிலிலே மூன்று பேர் படுத்திருந்தார்கள்
குட்டி பெண் சொன்னாள்,
"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".
எல்லோரும் தள்ளிப் படுக்க
ஒருத்தர் உருண்டு விழுக.

இப்போ கட்டிலிலே இரண்டு பேர் படுத்திருந்தார்கள்
குட்டி பெண் சொன்னாள்,
"தள்ளி படுங்கள்! தள்ளி படுங்கள்!".
எல்லோரும் தள்ளிப் படுக்க
ஒருத்தர் உருண்டு விழுக.

குட்டி பெண் சொன்னாள்,
"இப்ப எல்லா இடமும் எனக்குத்தான்!".

ஆங்கில மூலம்
There were six in a bed
And the little one said
'Roll over, roll over'
So they all rolled over
And one fell out

சின்னச் சின்ன சிலந்தி பூச்சி



சின்னச் சின்ன சிலந்தி பூச்சி
ஏறி போச்சு தண்ணிக் குழாயிலே.
பெரிய மழை பெஞ்சு வழுக்கி விழுந்துச்சு வெளியிலே.
வெயில் அடிச்சு ஈரம் காஞ்சு போன பின்னாலே.
சின்னச் சின்ன சிலந்தி பூச்சி
திரும்ப ஏறி போச்சு தண்ணிக் குழாயிலே.

ஆங்கில மூலம்:
The itsy bitsy spider climbed up the water spout.
Down came the rain, and washed the spider out.
Out came the sun, and dried up all the rain
So the itsy bitsy spider climbed up the spout again.

மழலையர் பாடல்கள் - 1,2,3



ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
நான் பிடித்தேன் மீன் குஞ்சு.

ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து
அதை ஓடவிட்டேன் நீந்த விட்டு

ஓடவிட்டது எதனாலே?
என் விரலைக் கடித்ததாலே.

அது கடித்தது எந்த விரல்?
இதோ இந்த சுண்டு விரல்.

ஆங்கிலப் பாடல்:

One two three four five.
Once I got a fish alive.
Six seven eight nine ten
Then I let it go again.
Why did you let is go?
Because it bit my finger so.
Which finger did he bite?
This little finger on the right.

குலை நடுக்கிய Jet Airways

Tuesday, May 22, 2007

சென்ற சனிக்கிழமை 18/05/2007 அன்று இரவு மதுரையிலிருந்து சென்னைக்கு Jet Airwaysன் விமானம்: 9W 3520ல் பயணம் செய்தேன். அரை மணி நேரம் தாமதமாக 21:30க்கு புறப்பட்ட விமானம் சென்னையில் தரை இறங்கும்போதுதான் பயணிகள் எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொள்ளும்படி நேர்ந்தது.

முதலில் விமானம் இடதுபுறம் பலமாக சாய்ந்தது. அதை ஈடுகட்ட வலப்புறம் மறுபடியும் பலமாக சாய்ந்தது. மீண்டும் இடதுபுறமும் வலதுபுறமும் தடுமாறி ஒருவழியாக சமநிலைக்கு வந்த மறுகணமே அதிவேகமாக தரை இறங்கியது. வேகத்தை உடனடியாக குறைக்க முடியாததால், ஓடுதளத்தில் திருப்பங்களில் நிலைகொள்ளாமல் ஓடி எதில்போய் முட்டப்போகிறதோ என்று பயம் கொள்ள வைத்தது. விமானி விமானத்தை நிறுத்திய பின் சம்பிரதாயமாக சொல்லும் வாழ்த்துக்களைக்கூட சொல்லவில்லை.

பயணிகள் பலரும் பணிப்பெண்களிடம் வாதிட்டார்கள். விமானநிலையத்தில் நானும் மற்றொரு பயணியும் நிறுவனத்தின் மேலதிகாரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விமானியை மீண்டும் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்று சொன்னோம். நுட்பியல் காரணமாதலால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார்கள். என் வீட்டு முகவரியையும் மின்அஞ்சல் முகவரியையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். நான் மேலும் 30 மணிநேரம் விமானப் பயணம் செய்து வீட்டிற்கு வந்த பின்னும் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து அவர்களுடைய இணையதளத்தில் சென்று கொடுத்தப் புகாருக்கும் எந்த பதிலும் இல்லை. காமாராஜ் உள்நாட்டு விமான நிலைய அதிகாரிகளிடம் புகார்செ ய்ய அவர்களின் தொடர்புகள் தெரியவில்லை.

இபோதைக்கு நான் செய்ய முடிந்தது, உங்கள் பாதுகாப்பிற்கு Jet Airwaysஐ புறக்கணிக்கும்படி வேண்டுவது ஒன்றே.

கொடை வள்ளல்

Tuesday, April 17, 2007

வள்ளல்களின் ஒருகை செய்வது இன்னொரு கை அறியாது என்பர். என் எதிர்வீட்டில் இருக்கும், வயதில் அல்ல, கில்லாடித் தனத்தில் மூத்த அண்ணனின் குணமும் அஃதே. பதிவெல்லாம் போட மாட்டார். எனவே, அவர் புகழ் பரப்ப அடியேன் செய்யும் சிறு தொண்டு, அவருடைய லீலைகளை எடுத்துச் சொல்வது.

ஒரு முறை தன் துணைவி கோப்பெருந்தேவிவடிவின் (உண்மையானப் பெயர்), அமெரிக்காவில் உதவிக்கு யாரும் இல்லை என்ற பிக்கல் தாங்க முடியாமல், சமைத்துத் தருகிறேன் என்று சொல்லி முட்டைப் பொரியல் செய்து கொடுத்தார். அதை சாப்பிட்ட தேவி சிறிது நேரத்தில் மூர்ச்சை அடைந்தார். மருத்துவமனையில் உணவு விசமாகிவிட்டதற்காக (food poison) சிகிச்சை கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்கப்புறமும் அவருக்கு யாராவது வேலை சொல்வார்களா?

மனிதர்களின் செல்லப் பிராணிக்கும் அவருக்கும் அப்படி ஒரு பொருத்தம். அவைகளுக்கு அவர்மேல் கொள்ளைப் பிரியம். ஆனால் அவருக்கு பயமெல்லாம் ஒன்றுமில்லை, சற்று பாதுகாப்பு உணர்வு அதிகம். ஒருநாள் குடியிருப்பின் பொதுக் குப்பைத் தொட்டியில் குப்பைப் பையை போட்டுவிட்டுத் திரும்பினால், நாலுகால் நண்பன் ஒன்று துரைசாணியிடமிருந்து கட்டை அவிழ்த்துக்கொண்டு ஓடிவந்து அவரை நட்போடு பார்த்தது. ஆபத்தான நேரங்களில் மூளை துரிதமாக வேலை செய்யும் இல்லையா? கண நேரம்தான், சட்டென்று அருகில் இருந்த மகிழுந்தில் ஏறி கதவை சாத்திக்கொண்டார். வண்டி அங்கே குப்பைக் கொட்ட வந்த மற்றொரு பெண்ணுடையது. எந்திரத்தை (engine) நிறுத்தாமல் விட்டிருந்ததால் வண்டியை யாரோ களவாடிப் போவதாக நினைத்துக் கூச்சல் போட்டாள். செல்லப் பிராணியை அதன் அம்மா பிடித்துக்கொள்ள மெதுவாக கீழே இறங்கி எல்லோருக்கும் தன்னிலை விளக்கம் சொல்லித் தப்பி வந்தார்.

வள்ளல் பெருமானும் சிலரும் ஒரே வண்டியில் கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனைக்குச் (day after thanks giving sale) சென்று கொண்டிருந்தோம்.அவர் திடீரென்று "ஆ.. கை. கை" என்று அலறினார். வண்டி சாளரத்தின் வெளியே அவருடைய ஒருகை நீட்டிக் கொண்டிருந்தபோதே சாளரக் கண்ணாடிக்கதவு மேலெழும்பி மூடிக்கொண்டிருந்தது. கை கண்ணாடிக்கும் மேல்விளிம்புக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டதுதான் அலறலுக்குக் காரணம். கதவை மூடிக்கொண்டிருந்தது வேறு யாருமல்ல. அது அவருடைய இன்னொரு கை.

ஆகா, என்னே வள்ளல் குணம்.

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டிக்காக.

உனக்கும் எனக்கும்



என் தோழியின் தம்பிக்கு சரியாக காது கேட்காது. ஒருத்தருக்கு ஒருத்தர் நன்கு அன்பு செலுத்துவார்கள். இணை பிரியாத நண்பர்கள் போல கிண்டலும் கேலியுமாக பேசிக் கொள்வார்கள்.

ஒருமுறை நாங்கள் எல்லோரும் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஏதோ கோளாறினால் ஒலிபெருக்கியில் தடையேற்பட்டது. அதை சரி செய்தபின், தடைபட்ட இடத்திலிருந்து படத்தை மீண்டும் திரையிட்டார்கள்.

தம்பிக்குப் புரியவில்லை. அக்காவிடம் ஏன் படத்தை மீண்டும் போடுகிறர்கள் என்று கேட்டதற்கு அக்காள் சொன்னபதில், "முதலில் போட்டது உனக்கு, இரண்டாவது போட்டது எங்களுக்கு".

இது என் நண்பன் சொல்லக் கேட்டது.

இப்படி பல வகைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து உச்சுக் கொட்டுவதைவிட அவர்களோடு இயல்பாக பழகுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

பொடி நடையாப் போறவரே



எப்பவும் அமைதியை விரும்பும் நம்ம தல, எந்த வம்புக்கும் போகலைன்னாலும் அதுவே அவரைத் தேடி வருது இல்லையா? அந்த ராசிக்கு என் மேலேயும் ரொம்ப பாசம். அவ்...

ஒருவாட்டி, சென்னையில, அண்ணா சாலைக்கிப் பக்கமா சிவனேண்ணு நடைபாதயில போய்கிட்டு இருக்கேன். திடீர்னு பொம்பளப் பசங்க எல்லாம் எதிர்ல ஓட்டமா ஓடியாராங்க. பின்னாடி ஒரு பய, காலு ரெண்டும் முடமா இருக்கான், அவன் பலகயில உக்காந்து ரொம்ப வேகமா உருட்டிக்கிட்டுத் துரத்திக்கிட்டு வற்றான்.

ரவுடிப் பய, நம்மூரா இருந்தா விட்டுருவமா? புது இடம். கூட்டாளிங்களும் ஒருத்தனும் கூட இல்ல. சரி நம்ம வீரத்த இவங்கிட்ட காட்டுனா நமக்குத்தான் அசிங்கம். நமக்கெதுக்குப்பா வம்புன்னு அவசரமா கீழ எறங்கி சாலையோரமா நடக்கிறேன். ரெண்டடிதான் வச்சிருப்பேன். எதிர்ல அலங்கோலமா ஒரு பொண்ணு. கை ரெண்டையும் விரிச்சிக்கிட்டு "பொடி நடையாப் போறவரே" ன்னு, பாடிக்கிடே கட்டிப்பிடிக்க வந்துட்டாயா. நான் சட்டுன்னு குனிஞ்சி கையில சிக்காம தப்பிச்சேன். அதெ நெனச்சா இன்னும் குலெ நடுங்குதுடா ஆத்தி. இவ துரத்தித்தான் அந்தப் பய ஓடியிருக்கான்.

பாவம் இப்பிடியா பொம்பளப் புள்ளெய தனியா விடுவாங்க? நம்ம தலதான் ஏதும் நிதி ஒதுக்கி, சட்டம் போடணும்.

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டிக்காக.

ஊதுவத்திப் பேய்

Monday, April 16, 2007

கோவை விடுதியில் தங்கி பட்டயப் படிப்பு படித்துக் கொண்டிருந்த காலம். அரசினர் கல்லூரி விடுதியாதலால், மிதமிஞ்சியக் கட்டுப்பாடுகள் இருக்காது. எப்போதும் ஆரவாரமாயிருக்கும் இடத்தில் தேர்வுக் காலங்களில் மயான அமைதி நிலவும். சில மாணவர்கள் சரியாக சாப்பிடாமல் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு, இரவில் மோகினிப் பிசாசு அமுக்குவதாக எண்ணி அலறிக்கொண்டு ஓடுவது அடிக்கடி நடக்கும். மற்ற மாணவர்களும் அதைப் பார்த்து பயந்துபோய் இருப்பார்கள்.

அதில் வீரம் பேசிய ஒரு அறை நண்பனை அச்சுருத்த வந்ததுதான் ஊதுவத்திப் பேய். நள்ளிரவு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை, இரும்புக் கட்டிலின் கிடுகிடு ஆட்டமும், சத்தமும் திடுக்கிட்டு எழ வைத்தன. கண்ணெதிரே பயங்கர நிழல் உருவம் அகோரப் பற்களுடன் வாயில் அனல் கக்கிக் கொண்டிருந்தது. ஆ.. ஆ.. என்று கத்தி அப்படியே உறைந்து போய்விட்டான். சந்திரமுகியில் நம்ம தலெக்கி, கோவாலுவைத் தேடிப்போய், நேர்ந்த கதியிலும் அது கொடுமை.

கொள்ளி வாய் செய்முறை:
ஊதுவத்தி கங்கு நாக்கில் படாமல் பல்லால் கடித்துக் கொண்டு, வாய் மட்டும் தெரியும்படி கருப்புப் போர்வையால் போர்த்திக் கொள்ளவும். அதிகப்படியான தாக்குதலுக்கு, பல்லைக் கடித்தபடியே ஊதவும்.

இதில் ஊதுபத்தி உபயம் மட்டும்தான் அடியேன்.
வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டிக்காக.

பெரில் இடைமுகப்பு

Wednesday, April 11, 2007


மு.மயூரனின் விஸ்தா என்ன விஸ்தா? - Beryl on Linux பதிவிற்கு பின்னூட்டாக படம் இணைக்கமுடியாததால் என் பதிவில் இடுகிறேன்.

வண்டிச் சக்கரம் வட்டமிடும்.

Monday, April 09, 2007

வண்டிச் சக்கரம் வட்டமிடும்.
வட்டமிடும்.
வட்டமிடும்.
வண்டிச் சக்கரம் வட்டமிட்டு,
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டிக் குள்ளே பயணிகளை தூக்கிப் போடும்.
தூக்கிப் போடும்.
தூக்கிப் போடும்.
வண்டிக் குள்ளே தூக்கிப் போட்டு,
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டிப் பீப்பி சத்தம் போடும், பீப் - பீப் - பீப்.
பீப் - பீப் - பீப்.
பீப் - பீப் - பீப்.
வண்டிப் பீப்பி சத்தமிட்டு, பீப் - பீப் - பீப்
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டி ஆடியை துடைத்து வரும், சரக்- சரக்- சரக்.
சரக்- சரக்- சரக்.
சரக்- சரக்- சரக்.
வண்டி ஆடியை துடைத்தபடி, சரக்- சரக்- சரக்.
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டியில் பாப்பா கத்துக் கத்தும் வே - வே - வே.
வே - வே - வே.
வே - வே - வே.
வண்டி பாப்பாவும் கத்தி வர, வே - வே - வே
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டியில் மாமா வாய் அடக்கும் உம் - உம் - உம்
உம் - உம் - உம்.
உம் - உம் - உம்.
வண்டி மாமாவும் அடக்கிவர உம் - உம் - உம்
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

வண்டியில் அம்மா செல்லம் கொஞ்சும் என் கண்ணே.
என் கண்ணே.
என் கண்ணே.
வண்டி அப்பாவும் கொஞ்சிவர என் கண்ணே.
ஊரையெல்லாம் சுத்தி வரும்!

தழுவல்: "Wheels on the bus goes round and round"

எங்கத் தாத்தா பண்ணையிலே



எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
வாத்து ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
மாடு ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு மூ மூ , அங்கொரு மூ மூ
இங்க மூ, அங்க மூ
எங்கையும் மூ மூ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
நாய் ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு ஊவ் ஊவ் , அங்கொரு ஊவ் ஊவ்
இங்க ஊவ், அங்க ஊவ்
எங்கையும் ஊவ் ஊவ்
இங்கொரு மூ மூ , அங்கொரு மூ மூ
இங்க மூ, அங்க மூ
எங்கையும் மூ மூ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
பன்றி ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு ஒய்ங்க் ஒய்ங்க் , அங்கொரு ஒய்ங்க் ஒய்ங்க்
இங்க ஒய்ங்க், அங்க ஒய்ங்க்
எங்கையும் ஒய்ங்க் ஒய்ங்க்
இங்கொரு ஊவ் ஊவ் , அங்கொரு ஊவ் ஊவ்
இங்க ஊவ், அங்க ஊவ்
எங்கையும் ஊவ் ஊவ்
இங்கொரு மூ மூ , அங்கொரு மூ மூ
இங்க மூ, அங்க மூ
எங்கையும் மூ மூ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

மூலம்: http://www.learnenglish.org.uk/kids/songs/docs/oldmac.pdf

சப்பானில் சல்லல்லா

Wednesday, March 21, 2007

தமிழ்த் திரைப்படப் பாடலுக்கு சப்பானியக் குழந்தைகளின் நடனம். மிக அருமை
நீங்கள் முன்பே பார்த்திருக்கக் கூடும். பின்னணிச் செய்திகள் தெரிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

குடும்பமரம்

Tuesday, March 20, 2007

இந்த ஆண்டு இரண்டாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு சொல்லிக் கொள்ளும்படி நல்ல புறத்திட்டுக்கள் தரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தபோது முன்னோர்களை நினைவு கொள்ளும் விதமாக "குடும்ப மரம்" (family tree) என்ற புறத்திட்டு (project) கொடுத்திருந்தார்கள்.

அது பல பகுதிகளைக் கொண்டது.

1. குடும்ப மரம் தயார் செய்ய வேண்டும். படங்கள், பெயர், பிறந்தநாள், போன்ற விபரங்களை அடுக்கடுக்காக அமைக்கவேண்டும். கீழ் வரிசையில் மாணவரும் அவருடன் பிறந்தவர்களும். அதற்கு மேல்வரிசையில் பெற்றோர் அதற்குமேல் பெற்றோரின் பெற்றோரின் பெற்றோர், இப்படியாக.

2. காலக்கோடு (timeline) உருவாக்கம்.
அதில் பிறந்த நாளில் தொடங்கி நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பதியவேண்டும், புறத்திட்டு முடிக்க வேண்டிய நாளில் முடியவேண்டும். நடக்க தொடங்கியநாள், சகோதரசகோதரிகளின் பிறந்த நாட்கள் போன்ற குறைந்தது 10 முக்கிய நாட்களைக் குறிப்பிடவேண்டும்.

3. எதாவது ஒரு முன்னோரை நேர்காணவேண்டும்.

4. அவர்களுடைய பள்ளிப்பருவத்தோடு மாணவரின் அன்றாட செயல்பாடுகளை ஒப்பிடவேண்டும்.

5. மேல்கண்ட ஒப்பீட்டை வென் வரைபடமாக (venn diagram) வரையவேண்டும்.

6. குடும்பத்தின் அடையாளமாக உள்ள ஒருபொருளைக் கொண்டுவந்து அதன் முக்கியத்துவத்தை விளக்கவேண்டும். திருக்குறளைக் கொடுத்து, "இனிய உளவாக.." என்று தொடங்கும் குறளுக்கு பொருள் கூறச் செய்தேன்.

7. குடும்பத்தின் சிறப்புப் பண்டமொன்றின் செய்முறையை விளக்கவேண்டும். முடிந்தால் அதைக் கொண்டுவந்து மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். என் மனையாள் பருப்பு வடை கொடுத்து அனுப்பினாள். ஆசிரியைக்குப் பிடித்துப்போய்விட்டது. தானே செய்து பார்ப்பதாக சொல்லியிருக்கிறாள்.

என் அப்பாவை தொலைபேசியில் பேட்டிகாண உதவியபோது நான் அறிந்திறாத செய்திகள் கிடைத்தன. அவர் சோழவந்தானில் இருந்த உயர்நிலைப் பள்ளிக்கு தன் கிராமத்திலிருந்து தினமும் ஐந்து கி.மீ நடந்து போனதையும், இடையில் ஆற்றை நீந்திக் கடந்து போய்வர வேண்டியிருந்தது என்றும் தெரிந்து கொண்டேன்.
மாணவர்களுக்கு விளங்கும் பொருட்டு துணைக்கோள் படங்களும் கொடுத்து அனுப்பினேன். அதில் குளிக்கப் போகும் கண்மாய், அவர்கள் வீட்டில் வளர்த்த மாட்டை அழைத்து செல்லும் பால்ப்பண்ணை, தோராயமாக பள்ளிக்கு செல்லும் வழி இருக்குமிடங்களையும் குறித்துக்கொண்டோம்.
(உதவி விக்கிமாப்பியா http://wikimapia.org)

இப்படிப்பட்ட பாடத்திட்டங்கள் இந்தியாவில் இல்லையே என்று வருத்தமாயிருக்கிறது.

ஜெல்டா - சந்தியாகால இளவரசி

Thursday, January 25, 2007

நின்டெண்டோ (Nintendo) நிறுவனத்தின் புதிய நிகழ்பட விளையாட்டு
முனையம் (video game console) 'வி' ('Wii') விற்பனைக்குவந்த முதல் நாளே
வாங்கிவிட்டேன்.

இரண்டு ஆண்டுகளாக அதைப்பற்றி வந்த விபரங்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் படித்திருந்தேன். விற்பனைக்கான நாள் (நவம்பர் 19 2006)
குறிக்கப்பட்டதும், மாணவர்கள் பள்ளி ஆண்டு விடுமுறைக்கு
காத்திருப்பதைப்போல காத்திருந்தேன். நள்ளிரவிலிருந்தே கடைமுன் வரிசையில்
நின்று (நான் 36வது ஆள்) வெற்றிகரமாக ஒன்று வாங்கிக் கொண்டேன். கூடவே
ஒரு வட்டு வந்தாலும், இன்னும் மூன்று வட்டுக்கள் (game dvds) வாங்கிக்கொண்டேன். அதில்
ஒன்றுதான் ஜெல்டா (Zelda - The twilight princes).

குழந்தைத் தனமான இந்த ஆர்வத்திற்கு காரணம் இதன் நூதன வடிவமைப்புதான்.
இதற்கு முன்வந்த முனையங்களில் எல்லாம் திரையில் பொருட்களை நகர்த்த
பொருத்தான்கள் (buttons) கொடுத்திருப்பார்கள். அவற்றை சுழற்றும் திசையில்
பொருட்கள் நகரும். உதாரணமாக வலதுபுறம் வரும் பந்தை அடிக்க மட்டையை (bat)
நகர்த்த பொருத்தானை வலப்புறம் தள்ளவேண்டும். செயற்கையான இந்தவழி
முறைகளால் பெரும்பாலோனார்க்கு இந்த விளையாட்டுக்களில் ஆர்வம் இருப்பதில்லை.
ஆனால் 'வி' யில் உங்கள் கையில் கட்டுக்கோலை (controller) எடுத்து இயல்பாக மட்டையால்
விளாசுவதைப் போல ஓங்கினால் போதும். எனவே 'வி' சிறியவர் முதல் முதியவர் வரை
எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. சரக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுப்போகிறது.



இந்த கட்டுக்கோலைக்கொண்டு ஜெல்டாவை விளையாடுவது நேரில் விளையாடுவது போல இருக்கிறது.
இரண்டு மாதங்களாக விளையாடுகிறேன், முழுவதும் முடிக்க இன்னும் சிலமாதங்கள் ஆகும். என்னை
கவர்ந்த ஒரு கட்டத்தை இங்கு விவரிக்கிறேன்.



நாட்டில் ஒளிக்கற்றைகள் சிறை பிடிக்கப்பட்டு எப்போதும் மந்தகாசமாக இருக்கிறது. லிங்க் (Link)
என்ற கதையின் நாயகனாக நாம் விளையாட வேண்டும். கிராமத் தலைவனை சந்தித்துவிட்டு குதிரையில்
வந்து கொண்டிருக்கிறேன். அப்போது காட்டுப் பன்றி வாகனத்தில் வரும் சில அசுரர்கள் தலைவனின்
மகள் இல்லியாவைக் (Illia) கடத்திச்செல்கிறார்கள். அவளுக்குப் பதினொரு வயதிருக்கலாம். பிடிபட இருந்த மற்றொரு
சிறுவனை விலக்கிவிட்டுத் தானே சிறைபடுகிறாள்.

நான் அந்த அசுரர்களைத் துரத்திக்கொண்டு செல்கிறேன். மலையின் மேல் பரந்த வெளியில்,
ஆணவத்தோடு வாகனத்தின்மீது இருந்து பார்க்கிறான். கையில் கொடிமரம். அதில் இல்லியா
கட்டப்பட்டு மயங்கிக் கிடக்கிறாள். எனக்கு இரத்தம் கொதிக்கிறது. ஒரு கையில் கடிவாளத்தைப்
(பொருத்தான் உள்ள ஒருகோல்) பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் வாளை (கட்டுக்கோல்)
உறுவுகிறேன். அந்தக் கோழை போரிடாமல், கொம்பெடுத்து ஊதுகிறான். உடனே மற்றப்பொடி
அசுரர்கள் வந்து என்னை சூழ்ந்து கொள்கிறார்கள். மழை பொழிகிறது. என்மீது தொடர்ந்து
தீக்கணைகள் தொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். எவ்வளவுதான் போராடினாலும் அவர்கள்
மீண்டு எழுகிறார்கள். சோர்ந்து போய், கடைசியில் என்னோடு எப்போதும் நிழலாகத்
தொடரும் மித்னாவைக் (Midna) கேட்கிறேன். அவள், உன் இலக்கு அந்த சிறுமியைக் காப்பது.
அந்த அசுரன் மீது குறி வை என்கிறாள்.

இம்முறை புத்துயிர் பெற்று மற்றவர்களை வீழ்த்திக்கொண்டே அசுரனையும் துரத்துகிறேன்.
அவன் முதுகில் படும் அடி போதவில்லை. எனவே, அவனைத் தாண்டிச் சென்று, திரும்பி நேரெதிரே
சந்திக்கிறேன். ஒரே வீச்சுதான், நிலை தடுமாறி தப்பி ஓடுகிறான். மீண்டும் அவனை
பாலத்தின்மீது சந்தித்து கவனமாக அவனை மட்டும் பாதாளத்தில் தள்ளி சிறுமியைக் காப்பாற்றுகிறேன்.

கிராமத்தில் இல்லியா கண்விழித்ததும் கேட்க்கும் முதல் கேள்வி, அந்த சிறுவனைப் பார்த்து .
"உன்னைத் தள்ளிவிட்டேன் என்று உனக்கு என் மீது கோபமா?". என்னை அறியாமலே என் கண்ணில்
கண்ணீர் வடிந்தது.

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

2007 பொங்கல்விழா கவிதைப்போட்டி

Sunday, January 21, 2007

தமிழ்மன்றத்தின்சார்பாக நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் என்னுடையப்பங்களிப்பாக கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஒன்றுவீதம் இக்கவிதைகளை அனுப்பினேன்.


கதிரவன்
------------
எங்கள் வாழ்வின் ஆதாரம்,
நம்பிக்கையின் அடையாளம்.
எங்களுக்கு உணர்வூட்டும் அமுதாய்,
இருள் போர்த்தும் எம்தாய்.

விதைப்பது எம் வயலில்,
விளைவது உன் செயலில்.
மறந்து மக்கள்,
துவள்வது கடும் வெயிலில்.
மரம் பறித்து
உளல்வது பனிப் புயலில்.

உன் இளஞ்சூடே எங்கள் உயிர்
உன் ஒளிக்கீற்றே எங்கள் உணவு.
உன் திறமே பொறியுணர்வு
உன் வரமே சுய அறிவு.

சுமைதாங்கி
----------------
பெற்றோர்சுமை, பெற்ற மக்களும் சுமை.
உடல்சுமை, உடமையும் சுமை.
செய்தன சுமை, செய்யாதனவும் சுமை.
இவற்றோடு என்னையும் சுமப்பவன் இறைவன்.


இல்லறம்
------------
நீருள்ளும் விளக்கெரித்தோம்
குளிர் நிலவும் கண்டு வந்தோம்.
ஆனால் உள்ளத்துள் ஒளியூட்டும்
இல்லறம் இழந்துவிட்டோம்.