ராகு கிரகத்துக்கு ராக்கெட் விட்ட அமெரிக்கா

Wednesday, February 20, 2008

சென்ற ஆண்டு எங்கள் ஊரில் புதுக்கோவில் திறப்புவிழா. சாப்பாட்டிற்கு நல்லக் கூட்டம், வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நின்றிருந்தவர்களிடம் ஹரே-ராமா ஹரே-கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் பகவத்கீதை விற்றுக் கொண்டிருந்தான். அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். எனவே பொழுது போக பேச்சுக் கொடுத்தேன்.

"உங்கள் குரு பிரபுலபாதா அமெரிக்கர்கள் நிலவுக்கு போகவில்லை என்று சொன்னாராமே உண்மைதானா?”, என்றேன்.
இப்போதுதான் செவ்வாய் கிரகத்திற்கே ரோபாட் அனுப்பி இருக்கிறார்களே, எனவே ஏதாவது மாற்றி யோசித்து புது விளக்கம் கொடுப்பார்கள் என்று நினைத்தேன்.

அவன் "உண்மைதான். விண்வெளி வீரர்கள் சென்றது நிலவுக்கு அல்ல ராகுவிற்கு!" என்றான்.

இந்த விடயம் எனக்கு புதிது. இதைப் பற்றி எழுதலாம் என்றால், அவன் சொன்ன விடயங்களுக்கு மேல் விபரம் தேடினால் அப்போது கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்தான் கிடைத்தது. உங்கள் பார்வைக்கு.

http://www.salagram.net/MoonLandingHoax.htm இந்த சுட்டியில் உள்ள சில பகுதிகளை முடிந்த அளவில் மொழி பெயர்த்து இருக்கிறேன்.

உசாத்துணைகள்: ஷ்ரீமத் பாகவதம்.
சத்வரூப தாஸ கோஸ்வாமியின் கட்டுரை


தேவரருள் சிரீல A.C.பக்திவேதாந்த சுவாமி நிலவில் காலடி எடுத்து வைத்ததை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்:

சில முத்துக்கள்:

20 வருசத்துக்கு முன்னாடியே சொன்னன், நான்சென்ஸ் - நிலாவுக்கு போறதாவது. இப்பத்தான் "ஆ. இது ஏமாத்து வேலைங்கறான்". அதான் வித்தியாசம். இருவது வருசத்துக்கு முன்னாடியே சொன்னன், "சின்னப் பிள்ளத் தனமால்ல இருக்கு, இதெல்லாம் வீண் செலவு. இந்த ராஸ்கல்ஸ் நிலாவுக்கு போகவே முடியாதுன்னுட்டு.” இப்பத்தான் நம்மாண்ட வற்றான். அதான் வித்தியாசம். நான் வெறும் பொது புத்தியை வெச்சே சொன்னன்.
நக்சத்ரானாம் அஹம் ஸாஸி.
சந்திர கிரகத்திற்கு போகணும்னா யஜ்னங்களும் கர்ம-காண்டங்களும் செய்யணும்னுட்டு பாகவதத்தில வாஸிச்சிருக்கம். சாஸ்த்ரத்திலயே எல்லாம் இருக்கு. இந்த ராஸ்கல்ஸ் எப்படி மெஷின வெச்சிண்டு போக முடியும். கொஞ்சமாவது காமன் சென்ஸ் வேணாமா? அவா சாஸ்த்திரம் சொல்றத கேக்கறதில்ல. ராஸ்கல்ஸ், வாய்க்கு வந்த படி எவனோ சொல்றத நம்பறாள்.

சாஸ்த்ர-சக்ஸுஸ்(சாத்திரங்களின் படி காண்கிறவன்). அதாவது நீ சாஸ்த்ரங்களின் கண்கொண்டு பார்க்கணும். ய- சாஸ்த்த்ரா-விதிம் உத்ஸ்ருஜ்ய வர்த்ததே காம ,,, ந சித்திம் ச (சாஸ்த்ரங்களை மறுத்து தன் வழியே போகிறவன் பக்குவம் அடைய மாட்டான்).


ஆனா நாம சாஸ்த்ரத்த நம்பறம். அதான் என்னால 20 வருசத்துக்கு முன்னாடியே சொல்ல முடிஞ்சுத்து. அதான் வித்யாசம். நாம சாஸ்த்ரம் சொல்றதயும், அல்ட்டிமேட் கிருஷ்ணன் சொன்னதயும் கேக்கறோம். அவ்ளோதான். நமக்கு எந்த பிரச்னையும் இல்ல. அவா சாஸ்த்ரத்த நம்ப மாட்டேங்கிறா, கிருஷ்ணனையும் நம்ப மாட்டேங்கிறா. அதான் ஏமாந்து போறா.
..
(ஜூலை 1 1977.)

ஸ்வரூப தாமோதரா: அவா நம்மோட ஆர்க்யூ பண்ண முடியல.
பிரபுபாதா: (சிரிப்பு) எப்ப சண்ட வரும்? நான்சென்ஸ், எப்பிடி ஆர்க்யூ பண்ண முடியும்? நீ ஒரு ராஸ்கல். அதெல்லாம் செய்யப் படாது.

அசிந்த்யா கலு யே பாவா ந தாம்ஸ் தர்கேண யோஜயேது.

“உனக்கு புறியலன்னா வாய வச்சுண்டு சும்மா இரு ராஸ்கல்". முட்டாள் மாறி விவாதம் பண்ணா ராஸ்கல்னுதான் பேரெடுப்ப. பேசாம பெரியவா பேச்சக் கேளு. உன் மூளைக்கு இதெல்லாம் ஏறாது ராஸ்கல். ஏன் வீணா காலத்த போக்கற? நான் என்ன சொறேன்னா, அவாளெல்லாம் ராஸ்கல்ஸ், தப்பான பாய்ண்ட்டச் சொல்லி சும்மா நேரத்த விரயம் பண்றா. ஏமாத்துப் பேர்வழிகள். கம்பெனி வச்சிருக்கா தெரியுமோல்யோ? எல்லாரும் போட்டோ ஸ்டூடியோ வெச்சிருக்கா. அங்க நிலாவுக்குப் போன மாறி பித்தலாட்டமா படம் பண்ணி இருக்கா. உனக்கு என்ன வேணும்னாலும் செய்வா. நீ ஐடியா சொன்னா போதும். சந்திர கிரகத்துப் போலாம், செவ்வாய் கிரகத்துக்கும் போலாம். இந்த ராஸ்கல்ஸ் எங்கயும் போலை. ஒருத்தனுக்கும் புத்தி கிடையாது. எப்பிடி போவா? சுள்ளானுங்க, அரை வேக்காடு.
...
(ஜூன் 1977)

ஹரி-சௌரி: அவா மொதல்ல சந்திரனுக்கு ஸ்புட்னிக் அனுப்புனப்போ ஒழுங்கா இறங்கக்கூட முடியலை. போய் மோதுனாளாம். அனுப்புன ஆகாய ஓடம் சந்திரன்ல முட்டி நொறுங்கி விழுந்துத்தாம்.
பிரபுபாதா: நொறுங்கித்தா?
ஹரி-சௌரி: நொறுங்கி விழுந்துத்து. ஆகாய ஓடம் போய் சந்திரன் மேல மோதுமாம்.
பிரபுபாதா: அவா எப்ப போனா? சும்மா பேத்தல். அப்பிடியே போயிருந்தான்னாலும் என்ன ஆயுத்து? அங்கே ஜீவனம் பண்ண முடியாதுன்னு ஒரு அறிக்கை விட்டா அவ்வளவுதான்.

(ஜூலை 1976)

பிரபுபாதா: வெய்யக் காலமாச்சே? சுக்ரன்ல ரொம்ப குளிரா இருக்குமே? இப்ப ஏன் போறா? (சிரிப்பு) சந்திரனுக்கே போலை, சுக்ரன் சந்திரனுக்கு மேல எங்கியோ இருக்கான். எப்பிடி போவா?
பலி-மர்தன: அவா சுக்ரனுக்கா போரா இல்லியே?
பிரபுபாதா:செவ்வாய்க்கா போறா?
பலி-மர்தன: சும்மா பூமியைச் சுத்தி வற்றா, அப்டித்தானே?
அம்பாரிசா: ஆமாம், ஆகாசத்தில ஒண்ணு சேரறா.
சிஷ்ய கோடி 3: நல்லா புழுகறா இல்லியா?
பிரபுபாதா: ஆமாம்.
(ஜூன் 1975)

சிஷ்ய கோடி 2: அவா சந்திரனில் நிஜமாவே கால்பதிச்சாளா, சிரில பிரபுபாதா?
பிரபுபாதா: இல்லை, அவாளால் அங்கேல்லாம் போவே முடியாது அப்புறம் எப்டி கால் வைப்பா? அங்கெல்லாம் போவே முடியாது. அது ரொம்ப தூரம். ஒன் கணக்கு என்ன? 1,600,000 மைலுக்கு அந்தாண்டை சூர்ய கிரகத்துக்கு மேல. 1,600,000 மைல் உயரம் சூரியனுக்கு மேலால. ஒன் கணக்குப் பிரகாரம் சூர்யன் பூமியில் இருந்து 93,000,000 மைலுக்கு அந்தாண்டை இருக்கான். அதுக்கும் மேல 1, 600,000 மைல் போனா சந்திரன். அதெப்டி முடியும்?

குரு க்ருபா: சந்திரன் எப்படி சூரியனுக்கு பின்னாடி இருக்கும்?

பிரபுபாதா: பின்னாடி இல்லை. மேல.

(மே 1975)

மதுவிசா: அரக்கர் கூட்டம் உயர உயரக் கட்டிடங்கள் கட்டி சுவர்க கிரகங்களுக்கு போக பாக்கிறதுகள்.
பிரபுபாதா: ராவணனுவள், ராவணன் சுவர்கத்துக்கு போக ஏணிப் படிக் கட்டினானாம். "தவம் இருந்து என்ன பயன்? நான் சுவர்கத்துக்கு ஏணிப்படி கட்டப் போறேன்" னானாம். அந்த ஏணி கட்டினாப்பலதான் இப்ப சந்திர கிரகத்துக்கு கிளம்பறதும். அவாளால் போவே முடியாது. போக முடியும்னு கனா காண்றா. ராவணன் செஞ்ச வேல மாதிரிதான். எத்தன வருஷமா போயிண்டுருக்காள்?. 1950 லேர்ந்து?

சிஷ்ய கோடி: சந்திரனை சுத்திப் பாக்கவா?
பிரபுபாதா: ஆமாம், அதுக்குத்தான்..
சிஷ்ய கோடி: 1955லேர்ந்து இருக்கும்.
மதுவிசா: 1955.
சிஷ்ய கோடி: மொதமொதல்ல சந்திரனுக்கு போனது 1961ல்.
பிரபுபாதா: அதுதான் ஆரம்பக் கட்டம். மொதல்ல நாயை அனுப்பினா. (சிரிப்பு)
மதுவிசா: ஆகாச நாய், ஆகாச எலி.
பிரபுபாதா: ஹா? ஆகாச எலியா.
சிஷ்ய கோடி: ஆகாச எலியும்தான்.
பிரபுபாதா: அப்ப 1955லேர்ந்து இருவதுவருஷமா என்ன பண்ணிட்டாள்?
சிஷ்ய கோடி: கோடிக் கணக்கில செலவழிச்சா.
பிரபுபாதா: ஆமாம், கொஞ்சூண்டு புழுதியை எடுத்துண்டு வந்தா, அவ்வளோதான்.
மதுவிசா: இப்ப பூமியிலயும் அதே புழுதியை கண்டுபிடிச்சிருக்கா.
பிரபுபாதா: ஆமாம். சும்மா ப்ராபகண்டா. அவா எப்ப போனா. இப்ப ரஷ்ய விஞ்ஞானியும் அமெரிக்க விஞ்ஞானியும் ஒண்ணு சேர்ந்துண்ட்டா. ரெண்டு பேரும் திருடனுங்க. ஒருத்தனுக்கு ஒருத்தன், "நீ என்னை காட்டிக் கொடுக்காதே. நானும் உன்னைக் காட்டிக் கொடுக்கலை. ஒண்ணா சேந்து இந்த ராஸ்கல்களை ஏமாத்தலாம்" ன்னு திட்டம் போட்டிருக்கா.
சிஷ்ய கோடி: அவா கூட்டு சேர்ந்துட்டா.
பிரபுபாதா: ஆமாம். கூட்டுக் களவாணிகள்.
(மே 1975)



கீழ் வருவது சதபுத தாஸின் "Vedic Cosmography and Astronomy" புத்தகத்தில் நிலவுக்கு பயணம் (Moon Flight) அத்தியாயத்தின் உள்ளடக்கத்தின் சுருக்கம் என்று ஆரம்பித்து எழுதப்பட்டது:

சிரில பிரபுபாதா விண்வெளி வீரர்கள் நிலாவுக்கு போகவில்லை என்று பலமுறைசொல்லி இருக்கிறார்.
அவர் சொன்ன காரணங்கள்:
  • 1)தேவ கணங்கள் மனிதப் பிறவிகளை உயர்ந்த கிரகங்களுக்குள் நுளைய அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்கு மனிதர்களுக்கு தகுதி இல்லை.
  • 2)சந்திரனில் நிரைந்திருக்கும் சுவர்க மண்டலத்தை விண்வெளி வீரர்கள் உணரவில்லை. அதனால் அவர்கள் சந்திரனுக்கு சென்றிருக்க வாய்ப்பு இல்லை.

சிரில பிரபுபாதா விஞானிகள் சந்திரனை அணுக முற்பட்டது ராகு கிரகம் சந்திரனை தாக்க முயன்றது போல அரக்கத் தனமானது (சிரிமத்.பாகவதம் -சி.ப- 5. 24. 3) மேலும் இந்திரன் அந்த பயணத்தை தடுத்திருப்பான் என்று விளக்கி இருக்கிறார். (அவர் விளக்க உரையுடன் எழுதிய) சிரிமத் பாகவதத்தில், காண்டம் 6, அத்தியாயம் 4, பா 6 மற்றும் காண்டம் 8, அத்தியாயம் 5, பா 34 க்கு அவர் குறிபிட்டுள்ளபடி சந்திரன் தாவரங்களுக்கு கடவுளாவான். ஆனாலும் விஞ்ஞானிகள் நிலவு பாலைவனமாக இருக்கிறது என்கிறார்கள்.

சந்திரனுக்கு செல்ல உயர் பரிமானத்தில் பயணிக்கவேண்டும் என்றும் சிரில பிரபுபாதா சொல்லியிருக்கிறார். எந்திர விண்வெளி ஓடங்களினால் சந்திரனை அடைய இயலாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். கடைசியாக சந்திரனை அடைய மானச ஏரியையும் சுமேரு மலையையும் கடக்க வேண்டியது அவசியம் என்றும் சொல்லி உள்ளார்.

எனவே இஸ்கான் பக்தர்களான நமக்கு உள்ள சில முடிபுகள்:

  • 1)விண்வெளி வீரர்கள் உண்மையிலேயே நிலவில் காலடி எடுத்து வைத்தார்கள். ஆனால் தேவர்களின் உலகை (சந்திரலோகம்) அவர்களின் ஊன உடலால் உணர முடியவில்லை.
  • 2)விண்வெளிவீரர்களை அவர்களின் பயணத்தின் ஒரு கட்டத்தில் தேவர்கள் மதிமயக்கி ராகு கிரகத்துக்கு திசை திருப்பி விட்டிருக்ககூடும். (சி.பா 4. 29. 69ப)
  • 3)மனிதன் சந்திரனுக்கு சென்றது என்பது கோடிக் கணக்கான மக்களை 30 வருடங்களுக்கும் மேலாக முட்டாளாக்கிய பெரும் சூழ்ச்சி.

இது கருப்பினத்தவர் வரலாற்று மாதம்

Wednesday, February 13, 2008

ஆப்ரிக்கர்கள் தங்கள் நாட்டை விட்டு குடிபெயர்ந்து எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களில் சிறப்பு வாய்ந்த மனிதர்களையும் நினைவு கூறும் வண்ணம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் கருப்பினத்தவரின் வரலாற்று சிறப்பு மாதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இம்மாதத்தில் என் மகளுக்கு புறத்திட்டாக, ஏதேனும் ஒரு கருப்பினத்தவரைத் தெரிவு செய்து அவரைப்பற்றி சேகரித்த விபரங்களுடன் கூடிய உருவபொம்மை செய்துவரச் சொல்வார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் வகுப்பில் அகஸ்தா சாவேஜ் என்ற பெண் சிற்பியைப் பற்றி எழுதினோம். அவர் செய்த சிறிய களிமண் சிற்பத்தின் படத்தை இணைத்திருந்தோம். ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் (PBSன் Antique roadshow) அதே சிற்பத்தை பார்த்தோம். அது 30,000 வெள்ளிகளுக்கு மதிப்பிடப்பட்டதில் உரிமையாளர்கள் போல நாங்களும் மகிழ்ந்தோம்.



இம்முறை பெட்ரீசியா பாத் என்ற கண் மருத்துவ வல்லுனரும் லேசர் விஞ்ஞானியுமான பெண்மணியைப் பற்றி எழுதியிருக்கிறோம். இவர் லேசர்பேக்கோ என்னும் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற்றுள்ளார். பூ விழுந்த விழி ஆடியை லேசர்மூலம் எளிதாக நீக்க உதவும் என்று தெரிகிறது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.



தெரிவு செய்ய வேண்டி மேலும் பல சிறந்த மனிதர்களைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள முடிந்தது. PBSலும் சென்ற வாரம், நாகரீகமாக வாழ்ந்த அப்துல் ரஹ்மான் என்ற ஆப்ரிக்க இளவரசன் அடிமையாக பிடிபட்டு அன்றைய (1788-1828) அமெரிக்காவின் கேவலமான சூழலில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் தன் நாட்டிற்கு திரும்பிய உண்மைக் கதையை (Prince Among Slaves) மிகவும் சிறப்பான முறையில் ஆவணப் படமாக வெளியிட்டார்கள்.

அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள் இன்று மீண்டு வந்துவிட்டார்கள். எல்லாரும் சமம் என்று உணர்ந்ததால், ஏதாவது ஒருவகையில் (பள்ளி தேர்ச்சி, வருமானம்) ஒரு சமூகத்தின் பங்கீடு சரியான விகிதத்தில் இல்லை என்றால் திட்டத்தில் என்ன கோளாறு என்றுதான் அலசுகிறார்கள். எல்லா குடியிருப்புகளிலும், பணிஇடங்களிலும் யாரையும் நாடு, மொழி, நிற பேதம்பார்க்ககூடாது என்று சட்டம் இருக்கிறது.

ஆனாலும் சமயவழிபாட்டில் அரசு குறுக்கிடக்கூடாது என்றக் கட்டுப்பாட்டினால், இந்துக் கோவில்கள் பலவற்றில் தமிழ் தெய்வம் முருகனுக்கும்,தென்னிந்தியர்களுக்கும் எதிராக மறைமுகத் தீண்டாமை நிலவுகிறது. சில சமயங்களில் வாடகை வண்டிஓட்டும், உணவு விடுதி நடத்தும் இந்தியர்கள் வாடிக்கையாளர்களிடம் பாரபட்சம் காட்டி பிடிபட்டு கடுமையான கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உள்ளாகிறார்கள். ஆனால் கோவில் கூடாரங்கள் இன்னும் மாட்டவில்லை.

ரவிக்கை மறைக்கும் நாராயண தரிசனம்

Monday, February 11, 2008

சென்ற ஆண்டு வெளிவந்த திருவின் இடுகையில் சேரலப்பெண்டிர் ரவிக்கை அணியக் கட்டுப்பாடு இருந்தைப் படித்து அதிர்ந்து போகாதவர்கள் இருக்கமுடியாது். கொஞ்ச நாள் முன்பு சில மலையாள நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர்கள் ஒரு முப்பது ஆண்டு முன்பு வரை இந்தக் கொடுமை நடைமுறையில் இருந்ததாக சொல்லி வருத்தப்பட்டார்கள்.

மற்றொருவரின் தந்தையும் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். எனக்கு முன்பே பழக்கமானவர். வேத துதி வகுப்புக்கு ஒரு முறை அழைத்து போயிருக்கிறேன். அங்கே நாராயணீயத்தின் மகிமை பற்றி சொல்லி சில பாக்களையும் பாடினார். அவர், "இதை என்ன பெரிய விடயமாக பேசுகிறீர்கள். அவர்கள் கோபியர் வழித்தோன்றல்கள். கோபியப் பெண்கள் உடையில்லாமல் யமுனையில் குளித்து அதை மாசுபடுத்தினார்கள். அதற்கு தண்டனையாகத்தான் கண்ணன் அவர்களுடைய உடைகளை எடுத்துக்கொண்டான். அதனால்தான் அவர்கள் ரவிக்கை அணிவதில்லை" என்றார். நல்ல வேளையாக மேலும் உளறும் முன் அவர் மகன் அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

ஆக நம் பெண்கள் ரவிக்கை அணியாமல் இருந்தது தலைமுறை தலைமுறையாக நேர்த்திக்கடனுக்காக வேண்டிதான். இவர்களும் அவர்களைப் பார்த்து பக்தி பரவசமடைந்து வந்தார்கள். இப்போது எல்லாம் கெட்டுவிட்டது.

நாளை என்பதில்லை நாரணனுக்கே, கூப்பிட்ட நொடியில் பக்தர்களைக் காப்பான் என்று அளக்கும் இவர்கள் ஏன், கதையில் பல யுகங்களுக்கு முன் அவன் களவாணித்தனமாக ஒரு முறை கடிந்தக் குற்றத்தைக் காரணம் காட்டி கால காலமாக ஒரு வம்சத்தையே தண்டிக்க வேண்டும்.

நேரில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு குத்துக்கல்லாக உட்கார்ந்திருந்தாலும் பரவாயில்லை. வக்காலத்து வாங்காமல் இருக்கலாமே.

திருத்தந்தை கத்தோலிக்கர்களின் 2000 ஆண்டுகாலத் தவறுகளுக்கு மன்னிப்புக் கோரியது போல கோவில்களும் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் நிலை வரும்.

ரெய்கி என்ற மாய்மாலம் - நிரூபித்த 9 வயது எமிலி ரோசா.

Monday, February 04, 2008



ரெய்கி, நலமளிக்கும் பரிசம் (Therapeutic Touch) என்று சிலர் அவ்வப்போது பேசக் கேட்டிருக்கிறேன். மெய்ப்பொருள் தெரிந்து கொள்ளாமல் சிறுமை படுத்தக் கூடாதென்றாலும், இவற்றை சிகிச்சை முறை என்று கதைப்பவர்கள் மற்ற சமூகப் பிரச்சினைகளிலோ, அறிவியல் துறைகளிலோ அவர்கள் எடுக்கும் பிற்போக்கு நிலைப்பாட்டால் இத்தகைய விடயங்கள் மீது இயல்பாகவே வெறுப்பு ஏற்படுகிறது.

விருப்பு வெறுப்பு நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இவ்விடயங்களில் உண்மை இல்லை என்பதை 1996லேயே எமிலி ரோசா தன் ஒன்பது வயதில் நிரூபித்திருக்கிறாள் என்று சென்ற மாதம் PBSன் Scientific American Frontiers தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்.

இந்த சிகிச்சை முறைகளில் பயிற்சி பெற்றவர், நோயாளியின் உடலில் சம சீரற்ற ஆற்றல் புலத்தை (energy field) அவர்களை தொடாமலேயே ஒருசில அங்குலம் தள்ளி தங்கள் கைகளாலேயே உணர்ந்து, சமன்படுத்தி விடுவதாக பாவனை செய்வார்கள். சிலர் பிரபஞ்சத்தில் நிரைந்திருக்கும் நலமளிக்கும் சக்தியைப் பெற்று நோயாளிகளுக்கு அளித்து குணமாக்குவதாக சொல்வார்கள். இந்த சிகிச்சை மூலம் உடல் மனநோய்களையும் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள். மருத்துவர்கள் உடலுக்கு ஆற்றல் புலம் இருப்பதாக நிரூபணம் இல்லை என்பதால் இவைகளை சிகிச்சையாக ஏற்றுக் கொள்வதில்லை.

எமிலி TT-க்காரர்களின் நிகழ் படத்தைப் பார்த்தபோது அவர்களின் சிகிச்சை முறை பற்றி சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதில் உண்மையைக் கண்டறிந்து தன் நான்காவது வகுப்பு அறிவியல் புறத்திட்டிற்காக அறிக்கையாக சமர்பிக்கலாம் என்று நினைத்திருக்கிறாள்.

ஒரு அட்டையில் தடுப்பு செய்து தன்னையும் எதிரில் இருக்கும் பயிற்சியாளரையும் மறைத்து, அதில் அவர்கள் கைகள் நுழைய இரண்டு துளைகளிட்டு வைத்தாள். பயிற்சியாளர் மேசைமீது தடுப்புக்கு இந்தப் பக்கம் துளைகள் வழியே நீட்டி உள்ளங் கைகளை மேல்நோக்கி வைத்திருப்பார். எமிலி ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு, தலையா பூவா பார்த்து அதன்படி தன் ஒரு கையை அவர்களுடைய வலது கை மேலோ இடதுகை மேலோ படாத வண்ணம் வைப்பாள். உடலின் ஆற்றல் புலத்தை உணர்வதாகக் கூறும் பயிற்சியாளர் எமிலியின் கை வலதுபுறம் உள்ளதா இடதுபுறம் உள்ளதா என்று சொல்ல வேண்டும்.

எமிலி ஒன்றிலிருந்து 27 வருடங்கள் வரை அனுபவம் உள்ள 21 பயிற்சியாளர்களை வைத்து 128 பரிசோதனைகள் செய்தாள். ஒவ்வொருவரும் பத்து முறை சோதனைக்கு உட்பட்டார்கள். அவர்கள் சரியாக கணித்த சமயங்கள் 50 சதவிதத்திற்கும் குறைவு. அவர்கள் குருட்டாம் போக்கில் சொல்லியிருந்தால் கூட குறைந்தபட்சம் 50 சதவீதம் சரியாக கணித்திருப்பார்கள்.

11 வயதில் எமிலியின் ஆய்வை பிரசித்தி பெற்ற The Journal of the American Medical Association வெளியிட்டது சாதனையாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய மற்றொரு சுட்டி

10 வருடங்களுக்கு முன்பே நிரூபிக்கப்பட்ட வாய்பந்தலில் இன்னமும் சிலபேர் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பயபக்தியும் செத்தக் கடவுளும்

Sunday, February 03, 2008